Published : 04 Aug 2019 08:47 AM
Last Updated : 04 Aug 2019 08:47 AM

அசாம் கல்லூரி மாணவி கொலை வழக்கு; இளைஞருக்கு தூக்கு தண்டனை: குவாஹாட்டி நீதிமன்றம் தீர்ப்பு

குவாஹாட்டி

அசாமில் கல்லூரி மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது ஆண் நண்பருக்கு தூக்கு தண்டனை விதித்து குவாஹாட்டி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

அசாம் மாநிலம் குவாஹாட்டியைச் சேர்ந்தவர் ஸ்வேதா அகர்வால். அவர் அங்குள்ள கே.சி. தாஸ் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சென்று வரும்போது, இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் சிங்கால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, கோவிந்த் சிங்கால் வீட்டுக்கு ஸ்வேதா அகர்வால் சென்றுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்யும்படி சிங்காலிடம் ஸ்வேதா வலியுறுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஸ்வேதா அகர்வாலை கோவிந்த் சிங்கால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ஸ்வேதா மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக அஞ்சிய சிங்கால், இதனை தற்கொலை போல காட்டுவதற்காக ஸ்வேதாவின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதற்கு, சிங்காலின் தாயாரும், சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ஸ்வேதா எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கு, குவாஹாட்டி நகர நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், முதல் குற்றவாளியான கோவிந்த் சிங்காலுக்கு தூக்கு தண்டனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மற்றும் சகோதரிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x