அயோத்தி விவகாரத்தில் சமரச முயற்சி தோல்வி; ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தினந்தோறும் வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம்

அயோத்தி விவகாரத்தில் சமரச முயற்சி தோல்வி; ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தினந்தோறும் வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி

அயோத்தி நில உரிமை  விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படவில்லை என மத்தியஸ்த குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தினந்தோறும் விசாரித்து வேகமாக முடிக்க  உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 

அயோத்தியில் நீண்டகாலமாக இருந்துவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சினையில் ஒருமித்த தீர்வுகாண உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். 

இக்குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் கோரி இருந்தனர்.

பின்னர் கடந்த ஜூலை 18-ம் தேதி மத்தியஸ்த குழுவின் சார்பில் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தெடார்ந்து மத்தியஸ்த குழு தனது அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.

மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைக்கப்பட்டு இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை தாக்கலை தொடர்ந்து வழக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அயோத்தி நில விவகாரத்தில் சமரச முயற்சி கைகூடவில்லை என மத்தியஸ்த குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தினந்தோறும் விசாரித்து வேகமாக முடிக்கப்படும் எனத் தெரிவித்தது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in