

தூத்துக்குடி
மாலத்தீவில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வீட்டுச் சிறையில் இருந்த முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அங்கிருந்து தப்பி படகில் தூத்துக்குடி கடல் பகுதிக்கு இன்று வந்தார். அவரை நடுக்கடலில் இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த மாலத்தீவில் அரசியல் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. முதல் முறையாக ஜனநாயக ரீதியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது நசீத் அரசு கலைக்கப்பட்டது. அவர் தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அதன்பிறகு மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகித்து வந்தார். அப்போது துணை அதிபராக இருந்தவர் அகமது அதீப். யாமீனின் நெருங்கிய நண்பராக இருந்தார். ஆனால், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தததாக அதீப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அதிபர் அப்துல்லா தனது மனைவியுடன் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது படகில் குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாமீன் உயிர்த் தப்பினார். மனைவி மற்றும் பாதுகாவலர்கள் 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
அதிபரை கொல்ல முயன்றதாக முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் (34) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படகில் குண்டு வெடித்தது குறித்து விசாரணை நடத்த எப்.பி.ஐ. அதிகாரிகள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் தீவிர ஆய்வு செய்து படகில் வெடிகுண்டு எதுவும் வெடிக்கவில்லை என்று கூறினர்.
எனினும் முன்னாள் துணை அதிபர் மீதான வழக்கு தொடர்ந்து நடந்தது. விசாரணையின்போது, பத்திரிகையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை. அகமது அதீப்பை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதீப்பின் பாதுகாவலர்கள் 2 பேருக்கும் இந்த கொலை முயற்சியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலையை மாலத்தீவில் கொண்டு வந்தார். கடந்த ஆண்டு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் இப்ராஹிம் சோலிஹ் அதிபரானபின் நிலைமை சீரடைந்து வருகிறது.
இதனிடையே, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதீப் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனைக்கு பிறகு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் வீட்டுக்காவலில் இருந்த அகமது அதிப் தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் மர்மமாக இருந்தது.
அகமது அதிப் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்தநிலையில் தூத்துக்குடிக்கு வந்த சரக்கு ஏற்றி வந்த படகு ஒன்றில் அவர் பயணம் செய்வதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தூத்துக்குடி விரைந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த சரக்கு கப்பலை உளவுத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் வழிமறித்து விசாரித்து வருகின்றனர். அந்த படகில் அதீப்பை தவிர 9 பேர் இருந்தனர். அவர்களில் 8 பேர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இந்தியர் ஆவார்.
அதீப் இந்தியாவில் இறங்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வேறு எந்த தகவலையும் உளவுத்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.