Published : 01 Aug 2019 04:53 PM
Last Updated : 01 Aug 2019 04:53 PM

அயோத்தி நில உரிமை வழக்கு: மத்தியஸ்த குழு அறிக்கையை தாக்கல்; உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழு உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அயோத்தியில் நீண்டகாலமாக இருந்துவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சினையில் ஒருமித்த தீர்வுகாண உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். 

இக்குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் கோரி இருந்தனர்.
பின்னர் கடந்த ஜூலை 18-ம் தேதி 
மத்தியஸ்த குழுவின் சார்பில் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,  ‘மத்தியஸ்த குழு ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம், அதன் பிறகு விரிவான நிலவர அறிக்கையை ஆகஸ்ட் 1-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.  அடுத்த விசாரணை ஆகஸ்ட்  2-ம் தேதி நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி மத்தியஸ்த குழு இன்று அறிக்கையை தாக்கல் செய்தது. மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைக்கப்பட்டு இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை தாக்கலை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x