Published : 01 Aug 2019 04:52 PM
Last Updated : 01 Aug 2019 04:52 PM

சொமாட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டரை ரத்து செய்தவருக்கு போலீஸார் நோட்டீஸ்

போபால், சொமாட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்து, அந்த உணவை இந்து அல்லாத ஒருவர் டெலிவரி செய்ய வருவதை அறிந்து அதை ரத்து செய்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச போலீஸார் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து ஆர்டரை ரத்து செய்த  நபருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த பண்டிட் அமித் சுக்லா எனும் வாடிக்கையாளர், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் பெற்று டெலிவரி செய்யும் சொமேட்டோ நிறுவனத்திடம் உணவு ஆர்டர் செய்தார். அவருக்கான உணவை ஓட்டலில் பெற்று யார் உணவைக் கொண்டு வருவார்கள் எனும் பெயரையும் அவருக்கு சொமேட்டோ நிறுவனம் பதிவிட்டது. 

இதைக் கண்ட உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளர் சொமேட்டோ நிறுவனத்தின் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டார். அதில் " நான் சொமேட்டோவில் ஆர்டர் செய்திருந்திருந்ததை ரத்து செய்கிறேன். நான் ஆர்டர் செய்திருந்த உணவை இந்து அல்லாத ஊழியரை எனக்கு டெலிவரி செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.

நான் உணவு டெலிவரி செய்பவரை மாற்றுங்கள் என்று கூறியும் அவர்கள் மாற்ற முடியாது, பணத்தையும் திரும்பத் தரமுடியாது என்று தெரிவித்துவிட்டார்கள். என்னை உணவை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம், ஆர்டரை ரத்து செய்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார். 

இதற்கு சொமேட்டோ நிறுவனம் அளித்த பதிலில், " உணவுக்கு மதம் இருப்பதில்லை. உணவே மதம்தான்" எனத் தெரிவிக்கப்பட்டது.   சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசியக் கொடியின் படத்தைப் பதிவிட்டு, " தேசத்தை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். வேறுபட்ட தளத்தில், பல்வேறுவகையான  எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் இருக்கிறார்கள். எங்களின் அடையாளங்களை இழந்து பெறும்  லாபத்தை  இழந்ததற்காக வருத்தப்படவி்ல்லை" எனத் தெரிவி்த்திருந்தார்.

இதனிடையே இந்த உணவை எடுத்துச் சென்ற ஊழியர் பயாஸ்-க்கு தன்னுடைய ஆர்டர் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் ஏதும் தெரியாமல் 2 மணிநேரம் இருந்துள்ளார்.அதன்பின் சமூக ஊடகங்களில் எழுந்த விவாதங்கள் குறித்து அறிந்தபின் அவர் அனைத்து விவரங்களையும் அறிந்தார்.

இதுகுறித்து பயாஸிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், " இந்த சம்பவம் எனக்கு வேதனையாக இருக்கிறது. என்ன செய்ய முடியும் சார், நாங்கள் எல்லாம் ஏழைகள். இந்த துன்பத்தை அனுபவித்து பொறுத்துதான் போக வேண்டும் " எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவங்களை எல்லாம் சமூக ஊடகங்கள் வழியாகக் கவனித்துவந்த ஜபல்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அமித் சிங், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் செயல்குறித்து ஆர்டரை ரத்து செய்த சுக்லாவிடம் விளக்கம் கேட்க முடிவு செய்து நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் எஸ்பி அமித் சிங் கூறுகையில், " சொமாட்டோ நிறுவனத்தின் உணவை வேற்றுமதத்தவர் டெலிவரி செய்கிறார் என்பதை அறிந்து ரத்து செய்த சுக்லாவின் செயல் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளோம். யாரும் எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை.

ஆனால் போலீஸார் இதுபோன்ற நேரங்களில் சூமோட்டாவை வழக்குப்பதிவு செய்ய அதிகாரம் உண்டு. அந்த அடிப்படையில்தான் சுக்லாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம் " எனத் தெரிவித்தார்.


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x