Published : 01 Aug 2019 03:50 PM
Last Updated : 01 Aug 2019 03:50 PM

ஒரு குற்றவாளிக்கு அதிகாரம் அளித்ததை பாஜக ஒப்புக் கொண்டது: பிரியங்கா ட்வீட்

புதுடெல்லி

உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி ஒரு குற்றவாளிக்கு பாஜகவில் அதிகாரம் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். 

கடந்த திங்கள்கிழமை ரேபரேலியில், உ.பி எம்எல்ஏவால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் தன் குடும்பத்தினருடன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 

காயத்துடன் உயிர்த் தப்பிய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ் விபத்து தற்செயல் அல்ல என்றும் இது திட்டமிட்ட சதி என்றும் எதிர்க்கட்சிகள் கண்டித்தன. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை லக்னோ மருத்துவமனையில் சந்தித்த பிறகு குல்தீப் செங்காரை இன்னும் எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யாத மத்திய, மாநில அரசுகளை அவர் கண்டித்தார். 

இந்நிலையில் இன்று, பாஜக எம்எல்ஏ செங்கார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். 

குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ கட்சியைவிட்டு நீக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: 

பாஜக, இறுதியாக ஒரு குற்றவாளிக்கு அதிகாரம் அளித்ததை ஒப்புக்கொள்கிறது. மேலும் தன்னை சரி செய்துகொண்டு சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இனி, அளவற்ற துன்பங்களுக்கு ஆளான ஒரு இளம் பெண்ணுக்கான நீதியின் வழியில் செல்லுங்கள்.

இவ்வாறு பிரியங்கா தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x