Published : 01 Aug 2019 06:42 AM
Last Updated : 01 Aug 2019 06:42 AM

பாகிஸ்தான் உட்பட 25 நாட்டில் இருந்து 1.21 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் இந்திய கம்பெனிகள்: தொண்டு நிறுவன ஆய்வில் அதிர்ச்சி தகவல் 

புதுடெல்லி

பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 25 வெளிநாடுகளில் இருந்து இந்திய நிறுவனங்கள் சத்தம் இல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘பண்டிட் தீன்தயாள் உபாத் யாய ஸ்மிருதி மஞ்ச்’ (பிடியுஎஸ்எம்) அரசு சாரா தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சமூக சேவைகளை செய்து வருகிறது. இந்நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2019 பிப்ரவரி மாதம் வரை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான், வங்கதேசம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகளை இந்திய நிறுவனங் களும் மறுசுழற்சியில் ஈடுபடும் நிறுவனங்களும் சத்தமில்லாமல் இறக்குமதி செய்து வருகின்றன. அந்த நாடுகளில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் டன்னுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளன.

அதில், 55 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

டெல்லியில் மட்டும் 19 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மறுசுழற்சி செய்து வரும் நிறுவனங்கள், உள்ளூரில் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்குவதற்கு ஆகும் செலவை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் கழிவுகளின் விலை குறைவு. அதனால், இதுபோல் சத்தமில்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்கின்றன. இதனால் பிளாஸ்டிக் மாசுப்பாட்டை தவிர்க்க எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடுக்கா விட்டால், உள்ளூரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக் கும்படி இந்திய நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்க முடியும்?

இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x