நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட கபே காபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் சொந்த காபி எஸ்டேட்டில் தகனம்: முதல்வர் எடியூரப்பா உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் கபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று ஏராளமானோர் கூடி இருந்தனர்.படம்: பிரகாஷ் ஹாசன்
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் கபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று ஏராளமானோர் கூடி இருந்தனர்.படம்: பிரகாஷ் ஹாசன்
Updated on
2 min read

இரா.வினோத்

பெங்களூரு

கபே காபி டே நிறுவனத்தின் உரிமை யாளரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி. சித்தார்த்தா வின் உடல் மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் இருந்து கண் டெடுக்கப்பட்டது. பிரேதப் பரி சோதனைக்குப் பின் அவரது உடல் சிக்கமகளூரு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு சொந்த மான காபி எஸ்டேட்டில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு வில் உள்ள சேத்தனஹள்ளியைச் சேர்ந்தவர் வி.ஜி.சித்தார்த்தா. நாட்டின் மிகப்பெரிய காபி எஸ்டேட்டுக்கு சொந்தக்காரரான எஸ்.என். கங்கையா ஹெக்டேவின் ஒரே மகனான இவர், கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மகள் மாளவிகாவை மணந்தார். கடந்த 1996-ல் பெங்களூருவில் கபே காபி டே நிறுவனத்தை தொடங்கினார்.

சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தனித்துவமான சுவையின் காரணமாக நாடு முழுவதும் 243 நகரங்களில் 1,751 கிளைகளைக் கொண்டுள்ளன. இதன் கிளைகள் சிங்கப்பூர், மலேசியா உட்பட 20-க்கும் மேற் பட்ட நாடுகளிலும் உள்ளன. சுமார் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளைக் கொண்ட வி.ஜி.சித்தார்த்தாவின் கடந்த ஆண்டு நிகர வருமானம் ரூ.2,016 கோடி ஆகும்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை யைச் சேர்ந்த இரு தனியார் வங்கிகளிடம் ரூ.7,500 கோடி கடன் வாங்கியுள்ளார். அதற்காக மாதந்தோறும் கோடிக்கணக்கில் வட்டி செலுத்தி வந்த நிலையில், வருமான வரி சோதனையிலும் சிக்கினார். அதில் ஏராளமான சொத்துகள் முடக்கப்பட்ட நிலை யில், கடனை அடைக்க முடியாமல் வி.ஜி.சித்தார்த்தா திணறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தனது காரில் ஓட்டுநர் பசவராஜ் பாட்டீல் உடன் பெங்களூருவில் இருந்து மங்களூரு வுக்கு சென்றுள்ளார். இரவு 7 மணியளவில் உல்லால் அருகே நேத்ராவதி பாலத்தின் அருகே சென்றபோது காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். ஓட்டுநரிடம் காத்திருக்குமாறு கூறிவிட்டு, நடந்துகொண்டே செல்போனில் பேசிக்கொண்டிருந்த வி.ஜி.சித்தார்த்தா திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ் பாட்டீல் அவரது செல் போனை தொடர்பு கொண்ட போது ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப் பட்டிருந்தது. உடனே பசவராஜ் பாட்டீல் மங்களூரு போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் பல்வேறு கோணங் களில் விசாரணையை தொடங் கினர். இந்நிலையில், வி.ஜி.சித்தார்த்தாவின் அலுவலகத்தில் அவர் கடந்த 27-ம் தேதி எழுதிய கடி தம் ஒன்று சிக்கியது. அதில், ‘இந்த முடிவு எடுத்ததற்காக என்னை மன் னித்து விடுங்கள்’ என எழுதியிருந் தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், உல்லாலை சேர்ந்த மீனவர் சைமன் டி'சவுசா, திங்கள்கிழமை இரவு நேத்ராவதி ஆற்றில் ஒருவர் குதித்ததைப் பார்த்ததாகக் கூறினார். இதை யடுத்து போலீஸார், தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மீனவர்கள், கடலோர காவல் படையினர், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் 30-க்கும் மேற்பட்ட படகுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நேத்ராவதி ஆறு, மங்களூரு துறைமுகம், அரபிக் கடல் கழிமுகம் உள்ளிட்ட இடங் களில் தேடினர். ஆனால் உடல் கிடைக்காத நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் உல் லால் பாலத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் வி.ஜி.சித்தார்த்தா வின் உடல் கிடப்பதாக மீனவர் ரித்தேஷ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, சம்பவ இடத் துக்குச் சென்ற போலீஸார் அவரது உடலை மீட்டு, வென்லாக் மருத் துவமனைக்கு பிரேதப் பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. மங்களூரு வில் இருந்து அவரது உடலை சிக்கமகளூருவின் மூதிகெரே அருகேயுள்ள சேத்தன ஹள்ளிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

சேத்தனஹள்ளியில் உள்ள வி.ஜி.சித்தார்த்தாவின் சொந்த காபி எஸ்டேட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மனைவி மாள விகா, இரு மகன்கள், மாமனார் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 96 வயதான அவரது தந்தை கங்கையா மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை.

கபே காபி டே நிறுவனத்தின் ஊழியர்கள், எஸ்டேட் பணியாளர் கள் வி.ஜி.சித்தார்த்தாவின் உட லைப் பார்த்து கண்ணீர்விட்டு கதறினர். எஸ்டேட் உரிமை யாளர்கள், திரைத் துறை பிரமுகர் கள், சிக்கமகளூருவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக் கள் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூருவில் இருந்து சேத் தனஹள்ளிக்கு சென்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமார சாமி, ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பரமேஷ்வர், டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரும், மங்க ளூரு மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில், சிக்கமகளூரு முன்னாள் காவல் கண்காணிப்பாளர் அண்ணா மலை ஆகியோரும் அஞ்சலி செலுத் தினர். இதையடுத்து நேற்று மாலை 7 மணியளவில் இறுதிச் சடங்கு நடந்தது. பின்னர் அவரது உடலுக்கு இரு மகன்களும் தீ மூட்டினர்.

சிக்கமகளூரு காபிக்கு உலக அளவில் பெருமையை பெற்றுத் தந்த வி.ஜி.சித்தார்த்தாவின் மறைவையொட்டி மூதிகெரே தாலுகாவில் வணிகர் சங்கங்கள் தாமாக முன்வந்து முழு அடைப் புக்கு அழைப்பு விடுத்தன. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் அடைக்கப் பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in