

புதுடெல்லி
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா கடந்த 25-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப் பப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு மசோதா சட்டமாகும்.
புதிய சட்டத்தின்படி, வாய் மொழி, எழுத்து, மின்னணு தகவல் தொடர்பு அல்லது வேறு எந்த வகையில் முத்தலாக் கூறினாலும் தண்டனைக்குரிய குற்றமாகும். முத்தலாக் கூறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும். முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும். இவ்வழக் கில் முஸ்லிம் ஆண்கள், மாஜிஸ் திரேட்டிடம் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். எனினும் புகார் கூறும் பெண்ணின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே ஜாமீன் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
முஸ்லிம் மத வழக்கத்தின்படி விவாகரத்தான பெண்கள், தங்கள் கணவருடன் மீண்டும் இணைய முடியாது. மற்றொரு ஆணை திருமணம் செய்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகே கணவரை மறுமணம் செய்ய கொள்ள முடியும். இந்த நடைமுறை ‘நிக்கா ஹலாலா' என்றழைக்கப்படுகிறது. புதிய சட்டத்தின்படி, ‘நிக்கா ஹலாலா' நடைமுறையைப் பின்பற்றாமல் முஸ்லிம் பெண்கள் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழலாம்.
விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்கள், தன்னுடன் குழந்தைகள் இருக்க உரிமை கோரலாம். இதனை மாஜிஸ்திரேட் முடிவு செய்வார் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.