Published : 30 Jul 2019 07:19 PM
Last Updated : 30 Jul 2019 07:19 PM
நீண்ட விவாதத்திற்கு பின், முத்தலாக் தடை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. தொடர்ந்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
முஸ்லிம் சமூகத்தினரிடையே நிலவி வரும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையைத் தடுக்கும் விதமாக இதைக் குற்றமாக்கும் முத்தலாக் தடை மசோதா கடந்த ஜூலை 25ம் தேதி மக்களவையில் நிறைவேறியது.
தொடர்ந்து இந்த மசோதா ஜூலை 30ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், அதிமுக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஓட்டெடுப்பில் டிஆர்எஸ் , தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்ற நிலை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.
அனைவருக்கும் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலளித்து பேசினார். இதன் பின்னர், ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் இந்த மசோதா நிறைவேறியதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். விரைவில் இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்பதன் மீதான வாக்கெடுப்பில் ஆம் என்று 84 வாக்குகளும் வேண்டாம் என்று 100 வாக்குகளும் பதிவானதையடுத்து நிலைக்குழுவுக்கு அனுப்பும் முயற்சியிலும் தோல்வி ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங் இந்த மசோதாவை எதிர்க்கும் போது, “முத்தலாக் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்துக்கள் மத்தியிலும் முத்தலாக்குக்கு சமமான ‘natra’ என்ற நடைமுறை உள்ளது, இதை ஏன் குற்றமாக்கவில்லை?” என்றார்.
இதற்குப் பதில் அளித்த ரவிசங்கர் பிரசாத், இந்து திருமணச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது 2வது திருமணம் செல்லாது என்பதோடு அது ஒரு கிரிமினல் குற்றம் என்று ஆனது. இதை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது. அதே போல் வரதட்சணைக் கொடுமை ஜாமீனற்ற குற்றம் என்று உள்ளது, என்று பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT