அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல்:  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப ஆ.ராசா வலியுறுத்தல்  

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read


புதுடெல்லி

மக்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தினார். 

நாடு முழுவதும் அணைகளின் பாதுகாப்புக்கு ஒரே வழிமுறைகளை வகுக்கும் திட்டத்தில் மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படுகிறது. அணை பாதுகாப்பு தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும். 

இச்சட்டப்படி மாநிலங்கள் அணைகளைப் பாதுகாக்க தனியாக ஆணையத்தை உருவாக்க வேண்டும். இந்த ஆணையத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். மேலும் ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய அணை ஆணையம் மேற்கொள்ளும். தமிழகத்துக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன. 

மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நான்கு அணைகளையும் தமிழ்நாடு அரசு தான் நிர்வகித்துப் பராமரித்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் இந்தப் புதிய மசோதா தமிழகத்துக்குச் சொந்தமான மேற்சொன்ன 4 அணைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வழிவகுக்கிறது.

இந்த மசோதாவுக்கு தமிழகம், கர்நாடகம்  உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தாக்கல் செய்து பேசிய மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘‘நாட்டின் மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் மீதுதான் 92% அணைகள் உள்ளன. அணைகள் பராமரிப்பில் மத்திய அரசின் பங்கு முக்கியம். மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை’’  எனக் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி.க்களான ஆதிரஞ்சன் சவுத்திரி, சசிதரூர் உள்ளிட்டோர் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. பிரேம சந்திரன் கூறுகையில் ‘‘இந்த மசோதாவில் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அணைகளுக்கான தேசிய ஆணையத்தில் யார் யார் பங்குதாரர் என்ற விவரம் கூட இடம் பெறவில்லை’’ என்றார்.

அப்போது பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in