முதலாவது, 3-வது சனிக் கிழமை 'நோ ஸ்கூல்பேக் டே': ஆந்திரா முழுவதும் உடனடியாக அமல் 

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

விஜயவாடா,

ஆந்திராவில் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாதத்தில் முதல், 3-வது சனிக்கிழமைகளில் புத்தகப் பையை பள்ளிக்குக் கொண்டுவரத் தேவையில்லை என்று ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  இது உடனடியாக அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார்  மற்றும் அரசுப் பள்ளிகளும் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை குழந்தைகளைப் புத்தகப் பை கொண்டுவர கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை உடனடியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு, குழந்தைகளின் பெற்றோருக்கும் முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநில அரசின் இந்த உத்தரவுக்கு குழந்தைகள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், குழந்தைகள் நல உரிமை ஆர்வலர்கள் என பலரும் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். 

கிருஷ்ணா மாவட்ட கல்வி அதிகாரி எம்.வி.ராஜ்ய லட்சுமி 'தி இந்து'விடம்(ஆங்கிலம்) கூறுகையில், " மாதத்தின் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ‘நோ ஸ்கூல்பேக் டே’ கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் புத்தகப் பை கொண்டுவரத் தேவையி்ல்லை" எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சமீபத்தில் கிருஷ்ணா மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர் பிவிஎஸ் குமார் எழுதிய கடிதத்தில் குழந்தைகளின் புத்தகப் பை சுமையைக் குறைக்கக் கோரி இருந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக உத்தரவிட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு குழந்தைகள் நலக் கமி்ட்டி நன்றி தெரிவித்தது. மேலும், இந்திய மாணவர் அமைப்பும் ஆந்திர அரசின் உத்தரவுக்கு மகிழ்ச்சி தெரிவித்தது. இது தொடக்கப் பள்ளி அளவோடு நின்றுவிடாமல் மேல்நிலைப் பள்ளி வரை செயல்படுத்த வேண்டும் என்றும் இந்திய மாணவர் அமைப்பினர் கேட்டுக்கொண்டனர். 

ராஜுலபுடி ஸ்ரீனிவாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in