Published : 29 Jul 2019 12:21 PM
Last Updated : 29 Jul 2019 12:21 PM
புதுடெல்லி
கட்சித் தலைமை குறித்த தெளிவான புரிதல் இல்லாததால் காங்கிரஸ் தற்போது கடினமான சூழலை எதிர்கொண்டு வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தது முதலே, கட்சியினர் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. கட்சியை யார் வழிநடத்துகிறார்கள், முக்கியப் பிரச்சினைகளை யாரிடம் கொண்டு செல்வது என்பதில் தெளிவின்மை நீடிக்கிறது. இதன் காரணமாக, காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் காணாத கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் செயற்குழு உடனடியாக தலையிட்டு, கட்சிக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க வேண்டும். பின்னர், புதிய காங்கிரஸ் தலைவரை, தேர்தல் மூலமாக தேர்வு செய்ய வேண்டும். அதேபோல, காங்கிரஸ் செயற்குழுவையும் கலைத்துவிட்டு, அதன் உறுப்பினர்களையும் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான், இப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வருபவர், கட்சியினரை ஒருங்கிணைக்கும் திறமை கொண்டவராகவும், மக்களைக் கவரும் தன்மை கொண்டவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவார் என நம்புகிறேன். அவருக்கு திறமைகள் இருக்கின்றன. இவ்வாறு சசி தரூர் கூறினார்.சசி தரூர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT