கர்நாடக முதல்வராக மீண்டும் பதவியேற்றார் எடியூரப்பா

முதல்வராகப் பதவியேற்ற பி.எஸ்.எடியூரப்பா. | படம்:கே.முரளிகுமார்
முதல்வராகப் பதவியேற்ற பி.எஸ்.எடியூரப்பா. | படம்:கே.முரளிகுமார்
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக பாஜகவின் பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார்.

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார். இதனையடுத்து கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

ஆளுநர் வாஜுபாய் வாலா எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 

கர்நாடக்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை விலக்கியதால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. 

இதையடுத்து, முதல்வராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால், குமாரசாமி தலைமையிலான 14 மாதகால ஆட்சி கவிழ்ந்தது.

ஆனாலும் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது  மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்படலாம் என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமை கோரியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஏனெனில் பாஜக ஆட்சிமன்றக்குழு எடியூரப்பாவை தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 

இந்நிலையில் அவர் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார்.  கடந்த 2018 மே மாதம் இவரது ஆட்சி 3 நாட்களே நீடித்தது. 

முன்னதாக 2008-ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை எடியூரப்பா முதல்வராகப் பதவி வகித்தார். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது. 

முதல்வராக அவர் முதன் முதலில் பதவியேற்ற போது 7 நாட்களே அவரால் பதவியில் நீடிக்க முடிந்தது. 2007-ல் தென் இந்தியாவில் முதல் பாஜக அரசு கவிழ்ந்தது, காரணம் மஜத தன் ஆதரவை விலக்கிக் கொண்டதே. 

இந்நிலையில் 4வது முறையாக கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in