

அசாம் மாநிலத்தில் உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 30 வங்க தேசத்தவர்கள் இன்று அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.
அசாமில் உள்ள வங்க தேசத்தவர்களைக் கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசியப் பதிவேடு கொண்டு வரப்பட்டது. குடியுரிமை மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று சொந்த நாட்டிற்கே வங்க தேசத்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''சமீபத்தில், இந்தியாவின் அசாம் பகுதிகளுக்குள் வெவ்வேறு நேரங்களில் நுழைந்த 30 வங்க தேசத்தவர்கள் சரியான பயண ஆவங்கள் இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் சிக்கினர். பிடிபட்ட இரண்டு பெண்கள் உட்பட 30 பேரும் மாநிலத்தின் பல்வேறு தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் அனைவரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் கரிம்கஞ்ச் எல்லை வழியாக அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் 30 பேரும் வங்க தேச எல்லைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்'' என்று தெரிவித்தனர்.