Published : 22 Jul 2019 09:09 PM
Last Updated : 22 Jul 2019 09:09 PM
புதுடெல்லி
மக்களாட்சியின் அடிப்படையைத் தகர்க்க முயல்வதாக மக்களவையில் மத்திய அரசு மீது திமுக குற்றம் சுமத்தியுள்ளது. தகவல் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் பேசிய அக்கட்சியின் மூத்த உறுப்பினரான ஆ.ராசா இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா இன்று பேசியதாவது:
''இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி, அரசியல் சாசன விழுமியங்களைத் தீர்மானிப்பதன் மூலம் மக்களாட்சியின் அடிப்படையைத் தகர்க்க அரசாங்கம் விழைகின்றது. இந்த சட்டத் திருத்தத்தில் இருக்கக்கூடிய அம்சங்கள் என்பது தகவல் உரிமை ஆணையத்தை தேர்தல் ஆணையத்துடன் ஒப்பிட முடியாது.
இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பின் 343 ஆம் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இது ஒரு அரசியல் சாசனத்தின் ஒரு அமைப்பாகும். ஆனால், இது ஒரு சிறிய அமைப்பு என்றும், இது சட்டதிட்டத்துடன் அமைந்த அமைப்பு என்றும் நீங்கள் சொல்கின்றீர்கள்.
தகவல் அறியும் உரிமை என்பது அரசியலமைப்பின் 19-வது சட்டப்பிரிவின் கீழ் வருகிறது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. அரசியலமைப்பின் 19-வது சட்டப்பிரிவு என்பது அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை உள்ளிட்ட அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பைத் திருத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் மிகப்பெரிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
324 ஆவது சட்டப்பிரிவு கூட திருத்தப்படலாம். 324 ஆவது சட்டப்பிரிவின் நோக்கம் என்பது சட்டப்பேரவை, நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஆகியவற்றுக்கான தேர்தலை நடத்துவதாகும்.
தேர்தல் முடிவடைந்த பிறகு அதனுடைய பணி ஏறத்தாழ முடிவுக்கு வருகிறது. ஆனால், தகவல் அறியும் உரிமை என்பது அப்படியல்ல. மக்களாட்சி என்பது வெறும் தேர்தலை மட்டுமே சார்ந்திருப்பது அல்ல. சாதாரண மனிதனுக்குத் தகவல் சென்றடையவில்லை என்றால் எவ்வாறு ஒரு மக்களாட்சி முழுமையான வளம் பெற்றதாக இருக்க முடியும்.
நாம் தேர்தல் ஆணையத்தை விட அடிப்படை உரிமைகளுக்கு அதிக மதிப்பளிக்க வேண்டும். ஏனென்றால் தேர்தல் ஆணையம் இல்லாவிட்டாலும் கூட சில நேரங்களில் மக்களாட்சி நல்ல நிர்வாகிகளால் நடத்தப்படலாம். ஆனால் தகவல் இல்லாமல், மக்களுக்கு அதிகாரமளிக்க முடியாது.
இது என்னுடைய முதலாவது வாதமாகும். இந்தச் சட்டத்தை அப்போது இயற்றியவர்கள், தங்களுடைய சிந்தனைகளில் தெளிவாக இருந்துள்ளனர். உங்களுடைய குறிக்கோள், இது இரண்டையும் சமப்படுத்த முடியாது என்பதாகும்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளும், மத்திய மாநிலத் தகவல் ஆணையம் இரண்டும் வெவ்வேறானவை. இவை இரண்டும் வெவ்வேறானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இரண்டில் எதற்கு அதிக முக்கியத்துவம்? மக்களாட்சி மற்றும் அரசியல் சாசனத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவனாக நான் நினைப்பது, தகவல் அறியும் உரிமை என்பது அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள பிறவற்றை விட முக்கியமானதாகும்.
இதன் உண்மையான மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பேசியதை மேற்கோள் காட்டுகிறேன். ''நமது அரசாங்கத்தின் புதிய விடிவாக இந்த மசோதா நிறைவேற்றம் இருக்கும் என்று இன்று நான் நம்புகிறேன். செயல்பாடுகள் மற்றும் செயல்திறனின் காலமாக இருக்கும். சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் வளர்ச்சியை உறுதி செய்யும் காலமாக இருக்கும். ஊழலை ஒழிக்கும் காலமாக இருக்கும். சாதாரண மனிதனையும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக்கும் காலமாக இருக்கும்'' என்றார்.
இப்போது இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்து நாம் இருளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்தச் சட்டம் மூலம் அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளின் காலமாக இருக்கப் போகின்றது. இந்த மசோதா உண்மையிலேயே கொண்டு வரப்பட்ட போது ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்னவாக இருந்தது?
நான் வார்த்தைகளில் விளையாட விரும்பவில்லை. ஆனாலும் ஒரு வாக்கியம். எங்களுக்குத் தகவல் அறியும் உரிமை வேண்டும். உங்களுக்குத் தகவலுக்கான சுதந்திரம் வேண்டும். வெளிப்படையாகப் பார்த்தால் இரண்டும் ஒன்று போல் இருக்கும். ஆனால் இந்த இரண்டு வாக்கியங்களுக்கு இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பேற்ககூடிய வகையிலும், முன்னேற்றப் பாதையிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். உலகமயமாக்கல், தாராளமயமாக்கலுக்குப் பிறகு மக்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
ஆனால் இந்தச் சட்டத்திருத்தம் சொல்வது என்ன? தகவல்களைத் தெரிந்துகொண்ட மக்கள் இல்லாமல் மக்களாட்சி இயங்க முடியாது. ஜனநாயக நடைமுறையில் இந்தச் சட்டம் மக்களைப் பங்கேற்க வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் இதற்கு மாறாக சென்று இதனை அழிக்க விரும்புகின்றீர்கள்.
விடுதலை இயக்கத்தின் போது நேருவின் மேற்கோளை நாம் மறந்துவிட முடியாது. ''1923 ஆம் ஆண்டின் அதிகாரபூர்வ ரகசியச் சட்டத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். இந்த நாட்டில் இருந்து இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பதை இந்தியர்கள் அறியாமலிருந்தார்கள். அதனாலேயே ஆங்கிலேயர்கள் செல்வந்தர்களாகவும், இந்தியர்கள் ஏழைகளாகவும் தொடர்ந்தார்கள்'' என்றார்.
1923 ஆம் ஆண்டின் ரகசியச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று உண்மையான இந்தச் சட்டத்தை இயற்றிய ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் சொன்னது. அதுதான் ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் நோக்கமாக இருந்தது. ஆனால் நீங்கள் இப்போது, இந்திய மக்களுக்கு இந்தக் கோர சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருந்த போது, மனித உரிமைகள் சட்ட மசோதா மூலம், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைத்து முடிவெடுத்துள்ளது.
உங்கள் நோக்கம் தெளிவாக உள்ளது. நீங்கள் சம்பளத்தையும் குறைக்க உள்ளீர்கள். சம்பளமும் மத்திய அரசின் பரிந்துரைப்படிதான் இருக்கும். தகவல் ஆணையம் உங்களின் பணியாளராக மாற்றப்பட உள்ளது என்று நான் குற்றம் சாட்டுகின்றேன்.
அதுதான் உங்கள் நோக்கம். இந்த மசோதாவை நிறைவேற்றும் வேளையில், நான் சொல்லவிரும்புவது என்னவென்றால், அசுர பெரும்பான்மை காரணமாக இந்த மசோதாவை நீங்கள் நிறைவேற்றினீர்கள் என்றால், இன்று நம்முடைய மக்களாட்சியின் கருப்பு தினம், நாம் மக்களாட்சியை புதைத்துவிட்ட காரணத்தால், இந்திய மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்''.
இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.
- ஆர்.ஷபிமுன்னா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT