Published : 22 Jul 2019 02:35 PM
Last Updated : 22 Jul 2019 02:35 PM
உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடி, மின்னல் தாக்கி ஒரே நாளில் 35 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கும் விவரம்:
பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்கள் சிலவற்றில் கடுமையான மழை பெய்து வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடி, மின்னல் தாக்கி ஒரே நாளில் 35 பேர் பலியாகினர்.
இதில், கான்பூர் மற்றும் ஃபதேபூரில் தலா 7 பேரும், ஜான்சியில் ஐந்து பேரும், ஜலாவுனில் நான்கு பேரும், ஹமீர்பூரில் மூன்று பேரும், காசிப்பூரில் இரண்டு பேரும், ஜான்பூர், பிரதாப்கர், கான்பூர் தேஹாத் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தியோரியா, அம்பேத்கர் நகர் மற்றும் குஷினகர் ஆகிய இடங்களில் பாம்பு கடித்ததால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதையும், நிவாரணப் பணிகளைச் செய்வதில் எந்தவிதமான குறைபாடும் இருக்கக்கூடாது என்பதையும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT