

அமர்நாத் யாத்திரை காரணமாக தனது தந்தையின் உயிரிழந்த உடல் கொண்டுசெல்வதை தடுத்து நிறுத்தியதாக காஷ்மீர் மாநில அரசு நிதித்துறை உயரதிகாரிஒருவர் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநில அரசின் நிதி இயக்குநர் இம்தியாஸ் வாணியின் தந்தை டெல்லியில் இறந்தார், அவருடைய உடலை காஷ்மீரில் உள்ள தமது வீட்டிற்குகொண்டுசென்றார். அப்போது வழியிலேயே ஆம்புலன்ஸ் வாகனம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக வருத்தம் தெரிவித்து வாணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
"ஜம்முவிலிருந்து காஷ்மீருக்குச் செல்லும்போது அனைத்து சிவில் உரிமைகளும் அமர்நாத் யாத்திரை காரணம் காட்டி மறுக்கப்படுகின்றன. எனது தந்தையின்இறந்த உடலை காஷ்மீரில் உள்ள எனது வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூட எனக்கு அனுமதி இல்லை. சாதாரண ஒரு காஷ்மீரியின் வாழ்க்கைகூட என்ன ஒரு நரகமாக உள்ளது. இன்ஸ்பெக்டர் ராகேஷ் @JmuKmrPolice ''யாத்திரை கடமையின்போது உடல் அனுமதிக்கப்படாது'' என்று கூறினார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஆனால் இதனை காவல்துறை மறுத்துள்ளது. இந்த அதிகாரியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றும் உண்மைகளை தவறாக சித்தரிப்பதாகவும் காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
"உண்மை என்னவென்றால், உத்தரப் பிரதேச ஆம்புலன்ஸ் ஒன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 05.57 மணிநேரத்தில் அமர்நாத் யாத்திரைசெல்லும் ஊர்வலத்தின் இடையே புகுந்தது. யாத்திரை ஊர்வலத்தோடு சேர்ந்து முன்னோக்கிச் செல்ல முயன்றதால்தான் உயிரிழந்த உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் யாத்திரையை வழிநடத்தும் பாதுகாப்பு அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டது. ‘
அப்போது ஆம்புலன்சில் இருந்த நபர், ''ஆம்புலன்ஸ் வாகனம் எனது தந்தையின் இறந்த உடலை சுமந்து செல்கிறது'' என்று கூறினார். வாகனம் நகர்ந்துசென்றுகொண்டிருந்ததால் அவர்சொன்ன உண்மைகளை அதிகாரியால் சரிபார்க்க முடியவில்லை. மேலும் வாகனம் யாத்திரையைப் பின்தொடர்ந்தது. இதனாலேயே ஆம்புலன்ஸ் யாத்திரையுடன் செல்ல அனுமதிக்கப்பட வில்லை'' இவ்வாறு போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.