Published : 17 Jul 2019 08:19 AM
Last Updated : 17 Jul 2019 08:19 AM

இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்ட அஞ்சல் ஊழியர் நியமன தேர்வு ரத்து: தமிழிலும் எழுத மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி

இந்தி, ஆங்கில மொழிகளில் நடத் தப்பட்ட அஞ்சல் துறை பணி களுக்கான தேர்வு ரத்து செய்யப் படும் என்றும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் அஞ்சலர், மெயில்கார்டு, உதவி யாளர், பன்முகத் திறன் ஊழியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப் பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி என 3 மொழிகளில் அமைந்திருக்கும்.

கடந்த 2015-ம் ஆண்டில் அஞ்சல் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடந்தது. இதில் ஹரியாணா, பிஹார் உள் ளிட்ட வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண் களை பெற்றது சர்ச்சையை ஏற் படுத்தியது. அதன் பின் கடந்த 4 ஆண்டுகளாக அஞ்சல் துறை தேர்வு நடத்தப்பட வில்லை.

இந்நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அஞ்சல் துறை சார்பில் ஊரக பகுதிகளுக் கான அஞ்சலர், உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தமிழகத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்தில் 989 பேர் எழுதினர். இதில் வழக் கத்துக்கு மாறாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்பட்டது. தமிழில் வழங்கப்படவில்லை.

தேர்வு நடைபெறுவதற்கு ஓரிரு தினங்கள் முன்பு இந்தி, ஆங்கிலத் தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என திடீரென அறிவிப்பு வெளி யானதே இதற்குக் காரணம். இதனால் அதிர்ச்சி அடைந்த விண் ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிட தடைவிதித்தது.

அஞ்சல் தேர்வு விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எழுப்பப்பட்டது. ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளிடையே நீண்ட நேரம் விவா தம் நடைபெற்றது. அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் நடத்த வலி யுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் படாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில், மாநிலங்களவை யில் நேற்று முன்தினம் பூஜ்ஜிய நேரத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இந்தப் பிரச் சினையை எழுப்பினர். தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் வினாத் தாளுடன் மீண்டும் தேர்வு நடத்தப் பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “உறுப்பினர்கள் எழுப்பி உள்ள பிரச்சினை மிகவும் முக்கியமானது. இதுகுறித்து சம் பந்தப்பட்ட அமைச்சரிடம் ஏற் கெனவே பேசி உள்ளேன். அவ ருடன் பேசுங்கள்” என்றார்.

மாநிலங்களவையில் 2-வது நாளாக நேற்றும் அதிமுக உறுப் பினர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பினர். திமுக, இந்திய கம் யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் இணைந்து கொண்டு அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக 4 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதுகுறித்து பேசும்போது, “தமிழ கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த அவையில் ஒரு பிரச்சினையை எழுப்பினர். இதுகுறித்து நான் உடனடியாக ஆய்வு செய்தேன். இதன் அடிப்படையில், கடந்த 14-ம் தேதி நடந்த அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி வினாத் தாளுடன் மீண்டும் தேர்வு நடத்தப்படும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழி களையும் மதிக்கிறது என் பதை இந்த அவைக்கும் நாட்டுக்கும் உறுதி அளிக்க விரும்புகிறேன். தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது, தமிழ் மொழியின் சிறப்பை நன்கு உணர்ந்துள்ளேன்” என்றார்.

இதையடுத்து, போராட் டத்தில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள் திருப்தி அடைந்தனர். மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் மத்திய அமைச் சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மைத்ரேயன் எம்.பி. கூறிய போது, "அஞ்சல் துறைத் தேர்வு விவகாரம் தொடர்பாக குரல் எழுப்பிய அனைத்து எம்.பி.க்களுக் கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்வு விவகாரத்தால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. அதனால்தான் குரலை உயர்த்தி எழுப்பினோம்" என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் எம்பி டி.கே. ரங்கராஜன் கூறியபோது, "மத்திய அரசின் அனைத்து துறைகளும் பிராந்திய மொழிகளில் போட்டித் தேர்வை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆனந்த் சர்மா பேசியபோது, "இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியின்படி மத்திய அரசின் அனைத்து துறைகளின் தேர்வு, பாதுகாப்புப் படைகளுக்கான தேர்வுகள் மும்மொழிக் கொள் கையின் அடிப்படையில் நடத் தப்பட வேண்டும்" என்று தெரி வித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x