

சமாஜ்வாதி கட்சி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நீரஜ் சேகர் எதிர்பார்த்தபடியே பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். பின்னர் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவையும் அவர் நேரில் சந்தித்தார்.
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) நீரஜ் சேகர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன் தான் இந்த நீரஜ் சேகர். இவர் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் ஏற்றுக் கொண்டார்.
பதவி விலகிய நீரஜ் சேகர் பாஜகவில் இணையவுள்ளதாகவும் அவர் மீண்டும் பாஜக சார்பில் உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டபடியே அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சிக்கு 10 எம்.பி.க்கள் இருந்தனர். நீரஜ் சேகர் ராஜினாமாவால் அக்கட்சியின் பலம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.