

புதுடெல்லி
கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் 14,800 தொண்டு நிறுவனங்கள் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் நித்தியானந்த் ராய் இதுதொடர்பாக கூறியதாவது:
கடந்த 2017- 18-ம் ஆண்டுகளில் நாடுமுழுவதும் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் 16,894 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றுள்ளன. இந்த தொண்டு நிறுவனங்கள் 2016-17-ம் நிதியாண்டில் 15343 கோடி ரூபாயும், 2015-16-ம் நிதியாண்டுகளில் 17803 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றுள்ளன. வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில் முறைகேடுகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 14,800 தொண்டு நிறுவனங்கள் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நித்தியானந்த் ராய் கூறினார்.