Published : 16 Jul 2019 01:19 PM
Last Updated : 16 Jul 2019 01:19 PM

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளுக்குள் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளுக்குள் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள், "மும்பை டோங்கிரி பகுதியில் முகமது அலி சாலையில் உள்ள அப்துல் ஹமீது தர்கா அருகே கேசர் பாய் என்ற குடியிருப்பு உள்ளது. 4 மாடிகளைக் கொண்ட இந்த குடியிருப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

ஒட்டுமொத்த கட்டிடமும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளோம். கூடவே மும்பை போலீஸார், தீயணைப்புப் படையினர் உதவியையும் கோரியுள்ளோம்" என்றனர்.

இதற்கிடையில் டோங்கிரி போலீஸார் விபத்து பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். தடுப்பு வேலிகளை அமைத்து கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். டோங்கிரி பகுதி போலீஸாருக்கு உதவியாக ஜெ.ஜெ.மார்க், எம்.ஆர்.மார்க் பகுதி போலீஸாரும் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் 2 குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. மீட்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x