Published : 15 Jul 2019 08:36 PM
Last Updated : 15 Jul 2019 08:36 PM
அமித் ஷா கையை நீட்டி மிரட்டும் தொனியில் பேசுகிறார். அவரை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம். அவர் என்ன கடவுளா? என இதுகாத்துல் முஸ்லீமன் கட்சித் தலைவர் ஒவைசி கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதா மீதான விவாதத்தில் இதுகாத்தூல் முஸ்லீமன் கட்சித் தலைவர் ஒவைசி பேசுகையில் “புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு தற்போது என்ன தேவை வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஒப்பிட்டு பார்க்க கூடாது. இந்தியாவின் நிலை வேறானது” எனக் கூறினார்.
அப்போது பாஜக எம்.பி சத்யபால் சிங் குறுக்கிட்டு “தீவிரவாத வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் ஹைதரபாத் போலீஸ் கமிஷனரை மாற்ற மாநில அரசு அலுத்தும் தருகிறது. தனிப்பட்ட சிலரை காப்பாற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தடுக்கவே மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது’” என்றார்.
இதற்கு ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்தார். ஆதாரமில்லாமல் பாஜக எம்.பி பேசுவதாக கூறிய அவர் பாஜகவினர் ஆதாரத்துடன் எதையும் பேச வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, உங்கள் மனதில் பயம் இருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் எனக்கூறினார்.
பின்னர் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஒவைசி தங்களுக்கு பிடிக்காதவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்துவதை பாஜவினர் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். அமித் ஷா கையை நீட்டி மிரட்டும் தொனியில் பேசுகிறார். அவரை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம். அவர் என்ன கடவுளா?” என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT