

புதுடெல்லி
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி உட்பட 19 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், 2019ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதிக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி கால அவகாசம் கோரி கடிதம் எழுதியுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்துக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பான செயல் திட்டம் குறித்து பரிசீலித்து உத்தர பிரதேச அரசு முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.