இலங்கை குண்டுவெடிப்பு; டெல்லியில் 14 பேர் கைது: தமிழகத்தில் சிக்கியவர்களுடன் தொடர்பு?

இலங்கை குண்டுவெடிப்பு; டெல்லியில் 14 பேர் கைது: தமிழகத்தில் சிக்கியவர்களுடன் தொடர்பு?
Updated on
1 min read

புதுடெல்லி

இலங்கை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடைய 14 பேர் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனையின்போது, தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக கைதான சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதைதயடுத்து தமிழகம், கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அடுத்தடுத்து சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கோவை, சென்னை, நாகை உள்ளிட்ட நகரங்களில் சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்கள் அளித்த தகவலின்பேரில், டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக  கூறப்படுகிறது. இவர்கள் 14 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in