Published : 02 Jul 2015 03:15 PM
Last Updated : 02 Jul 2015 03:15 PM
"சிலரது கருத்துகள் தொலைக்காட்சி விவாதத்துக்கு மட்டுமே சரியானதாக இருக்குமே தவிர, அரசை நிர்வகிக்க பொருந்தாது" என காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கியுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் ஐபிஎல் ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடி, போர்ச்சுகல் செல்வதற்கு பயண ஆவணம் பெற, பிரிட்டனிடம் பேசி சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தை எழுப்பி அவையில் பெரும் அமளி ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் வியூகம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, "சிலரது கருத்துகள் தொலைக்காட்சி விவாதத்துக்கு மட்டுமே சரியானதாக இருக்குமே தவிர அரசை நிர்வகிக்க பொருந்தாது" என்றார்.
இருப்பினும் லலித்மோடி குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும், ஜி.எஸ்.டி. மசோதா, நிலச் சட்டம் போன்றவை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றிற்கு முட்டுக்கட்டை போடுவதன்மூலம் வள்ர்ச்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படாது என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT