Published : 10 Jul 2015 09:15 AM
Last Updated : 10 Jul 2015 09:15 AM
‘‘வியாபம் ஊழல் வழக்கால், முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமை சிவராஜ் சிங் சவுகானுக்கு இல்லை. எனவே அவர் பதவி விலக வேண்டும்’’ என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
மத்தியப் பிரதேச தொழில் கல்வி வாரிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், மர்ம மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளதை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் நேற்று கூறுகையில், “வியாபம் ஊழலில் பலர் மர்ம மரணம் அடைந்துள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். முறையான விசாரணை நடக்க முதல்வர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் விலக வேண்டும். போலீஸ் துறைக்கு தற்போது அவர்தான் பொறுப்பு வகிக்கிறார். எனவே, அவர் பதவி விலகி நேர்மையான விசாரணைக்கு வழிவிட வேண்டும். வியாபம் ஊழலில் சம்பந்தப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட பின்னர், சவுகான் மீண்டும் முதல்வர் பதவியேற்கட்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.
ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ஆஷிஷ் கேத்தன் கூறுகையில், “வியாபம் ஊழல் தொடர்பாக மாநில சிறப்பு குழு நடத்திய விசாரணை குறித்து, உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. எனவே, சவுகான் பதவி விலகிவிட வேண்டும். சிவராஜ் சிங் சவுகான் மீதும் அவரது அரசு மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, முதல்வர் பதவியில் நீடிக்கும் தகுதியை சவுகான் இழந்து விட்டார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT