காஷ்மீரில் கன மழைக்கு 4 பேர் பரிதாப பலி

காஷ்மீரில் கன மழைக்கு 4 பேர் பரிதாப பலி
Updated on
1 min read

காஷ்மீரில் வியாழக்கிழமை மாலை முதல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதில் 4 பேர் இறந்ததாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஸ்ரீநகர் லே நெடுஞ்சாலையில் கந்தர்பால் மாவட்டம் குல்லன் பகுதியில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதில் குல்லன் கிராமத்தைச் சேர்ந்த இக்ரா மஜித் (15), மொமின் அகமது பாபா (10) என இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. சிந்து நதியிலிருந்து மீட்கப்பட்ட மற்றொரு உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்லும் பல்தல், பஹல் காம் ஆகிய வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.

இதில் பல்தல் செல்லும் வழி நிலச்சரிவால் தற்காலிகமாக மூடப்பட்டு சில மணி நேரத்துக்குப் பின் திறக்கப்பட்டது.

பஹல்காம் வழியில் பஞ்ச தாரணி பகுதியில் மன்சூர் அகமது ஷேக் என்கிற சுமை தூக்கும் தொழிலாளி மின்னல் தாக்கி இறந்தார்” என்றார்.

இதனிடையே காஷ்மீர் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in