Published : 19 Jul 2015 10:38 AM
Last Updated : 19 Jul 2015 10:38 AM
ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கொடுத்த இனிப்பை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டனர். இதனால் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய எல்லையோரம் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல முறை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி, ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எனினும், இந்திய - பாகிஸ்தான் இரு நாட்டிலும் பண்டிகை காலங்களில் ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லை பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் உள்ள வீரர்கள் வாழ்த்து சொல்லி இனிப்புகள் பரிமாறி கொள்வது வழக்கம். அதன்படி ரம்ஜான் பண்டிகை தினமான நேற்று பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்து சொல்லி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் இனிப்புகள் வழங்கினர்.
ஆனால், இனிப்புகளை வாங்க பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் இந்திய ராணுவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அமிர்தசரஸில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எப்.பரூக்கி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையின் போது பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்குவோம். ஆனால், இந்த முறை பாகிஸ்தான் வீரர்கள் வாங்க மறுத்துவிட்டனர். எல்லையில் அமைதியை ஏற்படுத்தவே நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்" என்றார்.
எனினும், இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையோரம் தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்துவதால், சர்வதேச எல்லை பகுதியில் உள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த முறை இனிப்புகள் வழங்கவில்லை என்று டெல்லியில் உள்ள எல்லை பாது காப்புப் படை தலைமையக அதிகாரி கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT