Published : 21 Jul 2015 08:45 AM
Last Updated : 21 Jul 2015 08:45 AM
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிர மடைந்து கடந்த இரு நாட்களாக குடகு, பாகமண்டலா, திருவேணி சங்கமா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
பாகமண்டலாவில் நேற்று இடைவிடாமல் பெய்த 100 மிமீ கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் நீர்மட்டம் 109.64 அடி யாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், விநாடிக்கு 12,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதே போல கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அணைக்கு வரும் 22 ஆயிரம் கனஅடி நீரில் 21 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப் பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 5,453 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதே போல ஹேமாவதி அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப் பட்டுள்ளதாக காவிரி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா திறந்துவிட்டுள்ள இந்த நீர் இன்று மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT