Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM

மந்துசார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன்: தொண்டர்களே தேர்ந்தெடுத்தனர்

மத்தியப் பிரதேச மாநிலம், மந்துசார் தொகுதியின் தற்போதைய எம்.பி. மீனாட்சி நடராஜன், அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட கட்சித் தொண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர் மற்றும் எம்.பி. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் “பிரைமரி” முறையை காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிமுகம் செய்துள்ளார். கட்சித் தொண்டர்களே வேட்பாளர்களை தேர்வு செய்யும் இம்முறையை வரும் மக்களவை தேர்தலில் அமல்படுத்துவதற்காக நாடு முழுவதும் 15 தொகுதிகளை அவர் தேர்வு செய்துள்ளார். இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மந்துசார் தொகுதியும் ஒன்று.

இத்தொகுதிக்கான “பிரைமரி” தேர்தல் மந்துசாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 1,501 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள். எனினும் 781 வாக்குகளே பதிவாயின.

இதில் இத்தொகுதியின் தற்போதைய எம்.பி. மீனாட்சி நடராஜன் 706 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நீமுக் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேந்திர சேத்தி 50 வாக்குகள் மட்டுமே பெற்றார். 25 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தேர்தலில் முறை கேடுகள் நடந்துள்ளதால் தேர்தல் முடிவுகளை புறக்கணிக்கிறேன் என சுரேந்திர சேத்தி அறிவித்துள்ளார். “வாக்களிப்பதற்கு பதிவு செய் திருந்த காங்கிரஸ் தொண்டர்களில் 500 பேர் இத் தொகுதியையோ, மாவட்டத்தையோ சேர்ந்தவர்கள் இல்லை.

எனவே தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ராகுல் காந்தியின் இந்த முன்னோடி திட்டம், அவருக்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொள்ளும் சிலரால் நாசம் செய்யப்படுகிறது” என்றார் அவர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான மீனாட்சி நடராஜன் 2009-ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு எதிராக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். கடந்த முறை இத்தொகுதி வேட்பாளராக இவரை ராகுல் காந்தி தேர்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x