Published : 14 Jun 2015 11:41 AM
Last Updated : 14 Jun 2015 11:41 AM

தெலங்கானா அரசு மீது புகார்: பிரதமருக்கு சந்திரபாபு நாயுடு 6 பக்க கடிதம்

தெலங்கானா அரசு மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து 6 பக்க அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனுப்பி உள்ளார்.

தெலங்கானா மேலவை தேர்தல் விவகாரம் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்கும்படி ரூ. 5 கோடி பேரம் பேசி, அதில் ரூ. 50 லட்சம் முன்பணம் வழங்கியதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி எம்.எல்.ஏ.வை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டது. இதனால் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநில முதல்வர்களும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் சந்திரபாபு நாயுடு டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் நேரடியாக முறையிட்டார். இதைத் தொடர்ந்து தெலங்கானா அரசு மீது ஏராளமான புகார்களை அடுக்கி 6 பக்க அறிக்கையாக பிரதமருக்கு அவர் அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகரமாக 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் விளங்க வேண்டும். ஆனால் தெலங்கானா அரசு ஹைதராபாதில் வசிக்கும் ஆந்திர மக்களிடம் பழிவாங்கும் உணர்வோடு நடந்து கொள்கிறது. அவர்களது அசையா சொத்துகளை இடித்து பழி தீர்த்து வருகிறது.

என்னுடைய தொலைபேசிகளை ஒட்டு கேட்கிறது. மேலும் ஆந்திர அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் உட்பட 120 பேரின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரு தனியார் நிறுவனம் செய்து வருகிறது. உடனடியாக இது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் சட்டப்பிரிவு 8-ன்படி ஹைதராபாத் சட்டம்-ஒழுங்கு ஆளுநரின் மேற்பார்வையில் இருத்தல் அவசியம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x