Published : 13 Jun 2015 09:28 AM
Last Updated : 13 Jun 2015 09:28 AM
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இரு இடங்களில், அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய சில நபர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை ஏந்தி பறக்கவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பிறகு, முகங்களை மறைத்துக் கொண்ட இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை நினைவுபடுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ஜாமியா மசூதியிலிருந்து நவ்கட்டா சவுக் வரை ஊர்வலமாகச் சென்றதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
மேலும் சில இடங்களில் பாகிஸ்தான் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளன. காவல்துறை யினர் சுதாரித்து மர்மநபர்களைப் பிடிக்கும் முன் அவர்கள் தப்பி விட்டனர். இதுவரை இச்சம்பவங்கள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் தொழுகைக்குப் பிறகு சில இடங்களில் பாகிஸ்தான் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. சோபோர் நகரம் உள்ளிட்ட பாரமுல்லா மாவட்டத்தின் சில இடங்களில் காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தெஹ்ரிக் இ ஹுரியத் அமைப்பின் உறுப்பினர் அல்டாஃப் ஷேக் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்த சயீத் அலி ஷா கிலானி தலைமையிலான ஹுரியத் மாநாட்டு கட்சி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT