

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த சாகிர் உசேன் கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னையில் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக இந்தியாவில் உளவு பார்த்தது விசாரணையில் தெரியவந்தது.
சென்னை, பெங்களூருவில் தாக்குதல் நடத்த மாலத்தீவில் இருந்து தற்கொலைப் படை தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருந்தது.
இதற்கான பொறுப்பை இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி முகமது சுலைமான் ஏற்றுக் கொண்டிருந்தார். மலேசியாவில் தங்கியிருந்த அவரை அந்த நாட்டு போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். பின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
மத்திய அரசின் நெருக்குதல் காரணமாக ஓராண்டுக்குப் பிறகு முகமது சுலைமான் குறித்த உளவு தகவல்களை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) மலேசிய அரசு இப்போது அளித்துள்ளது. இந்தத் தகவல்கள் தீவிரவாத தடுப்பு விசாரணைக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.