Published : 31 May 2014 07:13 PM
Last Updated : 31 May 2014 07:13 PM

ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து யோகேந்திர யாதவ் ராஜினாமா

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஹரியானா மாநில கட்சி ஒருங்கிணைப்பாளர் நவீன் ஜெய்ஹிந்த் கட்சியின் தேசிய செயற்குழுவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியிலிருந்து தொடர்ந்து பலர் வெளியேறி வரும் நிலையில், கட்சி பொறுப்பிலிருந்து இவ்விருவரும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே பேசுகையில், இவ்விருவரும் கட்சிப் பொறுப்புகளிலிருந்துதான் ராஜினாமா செய்துள்ளார்கள் என்றும், கட்சியிலிருந்து விலகவில்லை என்றும் விளக்கமளித்தார். கட்சியின் தேசிய செயலர் பங்கஜ் குப்தா கூறுகையில், இதைப் பற்றி தேசிய செயற்குழு கூட்டம் நடக்கும் போது விவாதிக்கப்பட்டும் என்றார்.

யாதவ் மற்றும் ஜெய்ஹிந்த் இடையே மோதல் வெடித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மோதல் தொடர்பாக விசாரிக்க ஜெய்ஹிந்துக்கு ஏற்கனவே கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலில், ரோடக் மற்றும் குர்கான் தொகுதிகளிலிருந்து போட்டியிட்டு ஜெய்ஹிந்த் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி, யோகேந்திர யாதவ், "நான் கட்சியிலிருந்து விலகவில்லை, அந்தச் செய்தி வெறும் புரளியே. நான் கட்சிக்காக இன்னும் கடுமையாக உழைப்பதை கடமையாகக் கருதுகிறேன் " என்று ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் விவகாரக் குழுவிலிருந்து விலகியதற்கான காரணத்தை கேட்ட போது யாதவ் பதிலளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x