Published : 24 Jun 2015 08:41 AM
Last Updated : 24 Jun 2015 08:41 AM

மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ஆந்திர மீனவர்கள் 9 பேர் பரிதாப பலி: நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஹெலிகாப்டரில் தேடும் பணி தீவிரம்

ஆந்திர மாநிலத்தில் கடலில் மீன் பிடிக்க சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் 9 மீனவர்கள் உயிரிழந்தது, தப்பி வந்த மீனவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணி 3 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா, விசாகப்பட்டினம், காகுளம், விஜயநகரம் ஆகிய கடலோர பகுதிகளிலிருந்து கடந்த 16-ம் தேதி 43 படகுகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது பலத்த புயல்காற்று மற்றும் மழை காரணமாக அவர்களால் உரிய நேரத்தில் கரைக்கு திரும்ப முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து அந்தந்தப் பகுதிகளில் மீனவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனிடையே 20 படகுகளில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினமும், நேற்றும் கரைக்கு திரும்பினர்.

ஆனால் 23 படகுகளில் சென்றவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. கிழக்கு கோதாவரி மாவட்டம், பகடால பேட்டா பகுதியை சேர்ந்த கோட்டய்யா என்ற மீனவர் கடலில் நீந்தியபடி காக்கிநாடா கடல் கரையை நேற்று வந்தடைந்தார். அவர் கொடுத்த தகவலின்படி, அவர் சென்ற படகு பலத்த சூறாவளி காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது. அவரோடு பயணம் செய்த 9 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இத்தகவலை மீன்வளத்துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். மீனவர் கோட்டய்யா காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3 ஹெலிகாப்டர்கள்

கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் அருண்குமார் இது தொடர்பாக நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் 3 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவி வழங்க பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x