Published : 05 Jun 2015 08:59 AM
Last Updated : 05 Jun 2015 08:59 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக அரசு செய்த செலவு தொகையை கணக்கிட்டு, தமிழக அரசிடம் வசூலிக்கப்படும் என அம்மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
ஜெயலலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதால் கர்நாடக அரசுக்கு தேவையற்ற பண விரயம் ஆகிறது. கர்நாடக மக்களின் வரிப்பணத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்குக்கு செலவு செய்யக்கூடாது என அரசுக்கு எதிராக அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கன்னட ஊடகங்களும், கன்னட அமைப்புகளும் இதே கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திராவிடம் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என யாரும் நெருக்கடி தரவில்லை. சட்டப்படி இந்த மேல்முறையீட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் விவகாரங்களை இணைத்து பார்க்கக்கூடாது. ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் உள்நோக்கத்துடன் கருத்துக்களை பரப்பக்கூடாது.
மேல்முறையீடு செய்வதற்கான ஆவணங்களை தயாரிப்பதில் கர்நாடக அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கான பணிகளை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும், சட்டத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் மேல்முறையீடு செய்யும் தேதி அறிவிக்கப்படும்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையும் விரைவில் வெளியிடப்படும்.
கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதாவது, பெங்களூருவில் தனி நீதிமன்றம் அமைப்பது, அதற்கான நீதிபதிகளை நியமிப்பது, அரசு வழக்கறிஞரை நியமிப்பது, நீதிமன்ற ஊழியர்களை நியமிப்பது, வழக்குக்கான தேவைகளை பூர்த்தி செய்வது உட்பட அனைத்து செலவையும் கர்நாடக அரசு செய்ய வேண்டும். இந்த செலவுத் தொகையை தமிழக அரசு கர்நாடகாவுக்கு அவ்வப்போது வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கடந்த 2004-ல் விசாரணை தொடங்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் கடந்த செப்டம்பரில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி, அரசு வழக்கறிஞர், ஊழியர்கள் நியமித்ததில் தொடங்கி, ஊதியம் வழங்கியது, ஆவணங்களை நகல் எடுத்தது வரை ரூ. 5.12 கோடி செலவாகியுள்ளதாக சட்டத்துறை தெரிவித்துள்ளது.
இதே போல பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜரான போது ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெங்களூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே பாதுகாப்பு பணிக்கு எவ்வளவு செய்யப்பட்டது என்பது குறித்து துல்லியமான அறிக்கை தாக்கல் செய்யும்படி உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இதே போல கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்து சட்டத்துறையும், உள்துறையும் கணக்கிட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக அரசு ஜெயலலிதா வழக்கில் செய்த செலவு தொகையைக் கணக்கிட்டு, அதனை தமிழக அரசிடம் இருந்து முறையாக வசூலிக்கப்படும். இதே போல தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடக அரசு செய்யும் செலவும் தமிழக அரசிடம் இருந்து பெறப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT