Published : 09 May 2014 09:17 AM
Last Updated : 09 May 2014 09:17 AM

தனியார் நிறுவனங்களின் 3 மனுக்கள் தள்ளுபடி: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி டிகுன்ஹா அதிரடி உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மற்றும் ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்களின் 3 மனுக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மற்றும் ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களின் மீதான‌ விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அந்நிறுவனங்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எஸ்.என்.டி.குலசேகரன்,''சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மற்றும் ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்களில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிறுவனங்களின் சொத்துக்க‌ளுக்கும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களும் எவ்வித தொடர்பும் இல்லை. இருப்பினும் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின் போது பலருடைய சொத்துக்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் இவ்வழக்கில் இணைத்துவிட்டனர். எனவே எங்களுடைய சொத்துக் களை உடனடியாக வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்'' என்றும், நிறுவனங்களிடம் இருந்து இணைக்கப்பட்டுள்ள நிலங்களின் ஆவணங்களை எங்களுக்கு வழங்க வேண்டும். ஏனென்றால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள அவை உதவியாக இருக்கும்'' எனக்கூறியும் தனித்தனியாக கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கிய நீதிபதி டி'குன்ஹா, ''சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து இப்போது தனியார் நிறுவனங்கள் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்வது ஏற்புடையதல்ல'' எனக்கூறி 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கடும் கண்டனம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது பவானி சிங் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக தமிழக அரசு வழக்கறிஞர் தம்பி துரை ஆஜராகியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மறைத்து, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை நீதிமன்றத்தில் வாதிட வைத்தது தவறு. நீதிமன்றத்தின் ஆணைகளை மறைத்ததற்காக தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு எனது கடுமையான கண்டங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x