

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசாவிடம், டெல்லி சிறப்பு நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு செய்தது.
வாக்குமூலம் பதிவு செய்யப்படும் முன் நீதிபதி ஓ.பி.சைனி: "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. இது நீதிபதிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையேயான நேரடி உரையாடல். கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் குற்றம் சாட்டப்பட்டவரின் விருப்பம்" என்றார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணியை மே 5-ம் தேதி (இன்று) மேற்கொள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் எற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று வாக்குமூலங்கள் பதிவு செய்வதை நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
கடைசியாக இந்த வழக்கு ஏப்ரல் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 824 பக்கங்களில் 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
அதற்கு டெல்லி சிறப்பு நிதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி : "குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்னை நேரடியாக எதிர் கொள்ளும் நேரம் வந்து விட்டது. இப்போதைக்கு கால அவகாசம் அளிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை; ஆனால் வாக்குமூலங்களை பதிவு செய்ய தொடங்கிவிட்டால் அதை நிறுத்தக்கூடாது. புல்லட் வேகத்தில் எனக்கு பதில்களை அளிக்க வேண்டும். வாக்குமூலம் பதிவு ஆரம்பித்த பிறகு அது எந்தவித இடைவெளியும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பேன்" என கூறியிருந்தார்.
மேலும், விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டப்பட்டோர் செயல்படக் கூடாது எனவும் நீதிபதி கண்டித்திருந்தார்.
இந்நிலையில், இன்று வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.