

நாட்டிலேயே முதல்முறையாக ரயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்ததற்காக 109 பேருக்கு அரசு ரயில்வே போலீஸின் (ஜிஆர்பி) ஆக்ரா பிரிவு 24 மணி நேர சிறை தண்டனை வழங்கியது. அபராதம் செலுத்தியதையடுத்து பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ரயில் நிலைய நடைமேடை, ஓடுபாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் உட்பட ரயில்வே சொத்துகள் மீது பான் பராக் போட்டு துப்புவதும், குப்பைகளை போடுவதும் வழக்கமாக உள்ளது. மேலும் கழிப்பறை இருந்தபோதும் பிற இடங்களில் சிறுநீர் கழிப்பதும் உண்டு. இதனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், இதுபோன்ற அவலங்களைப் பார்த்து கோபமடைந்த ஜிஆர்பி-யின் ஆக்ரா பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கோபேஷ்நாத் கண்ணா, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன்படி, ஆக்ரா கோட்டத்துக்குட்பட்ட 12 ரயில் நிலையங்களில் அரசு ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 48 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது, மது அருந்தியது, ரயிலின் ஜன்னல் வழியாக எச்சில் துப்புதல், குழந்தைகள், பெண்கள் முன்னிலையிலேயே சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட செயலில் ஈடுபட்ட 109 பேர் பிடிபட்டனர்.
இதுகுறித்து கண்ணா கூறும்போது, “ஆக்ரா கன்டோன்மென்ட், ஆக்ரா கோட்டை, இட்கா, ராஜா கி மண்டி மற்றும் துண்ட்லா உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பிடிபட்ட 109 பேருக்கு 24 மணி நேர சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் சட்டத்தின் 34-வது பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது” என்றார்.