

உத்தரகண்ட் மாநிலத்தில் சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து சனிக்கிழமை கவிழ்ந்ததில் 7 பெண்கள் உள்பட 19 பேர் பலியாயினர். 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரிஷிகேஷிலிருந்து சமோலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நந்த்பிரயாக் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென 985 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட பேரிடர் நிர்வாகப் பிரிவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், சம்பவ இடத்திலேயே 15 பேர் பலியாயினர். 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
மேலும் காயமடைந்த 3 பேர் சமோலி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். விபத்தில் இறந்தவர்களுக்கு உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், ஆளுநர் அஜிஸ் குரைஷி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த வர்கள் விரைவில் குணமடைய தேவை யான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.