Published : 09 Jun 2015 08:42 AM
Last Updated : 09 Jun 2015 08:42 AM
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி டெல்லியில் பிரமாண்ட யோகா முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 152 நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஐ.நா. பொது அவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி வரும் 21-ம் தேதி உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள ராஜபாதையில் 21-ம் தேதி காலை பிரமாண்ட யோகா முகாம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி முகாமில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி, இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனிடையே இம்முகாமில் பங்கேற்க 152 நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு தரப்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதவிர நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் சிறப்பு யோகா முகாம்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக 11 லட்சம் என்.சி.சி. மாணவர்கள் அன்றைய தினம் யோகா பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT