Published : 18 May 2014 11:04 AM
Last Updated : 18 May 2014 11:04 AM

அங்கீகாரத்தை இழக்கும் இடதுசாரி கட்சிகள்: இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் இணைப்பு சாத்தியமா?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் தேசிய அளவில் கடும் பின்னடைவை சந்தித்திருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) போட்டியிட்ட 90 சொச்சம் இடங்களில் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிட்ட 65 இடங்களில் ஒரே ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அரசியல் கட்சிகளாக தேசிய அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு அந்த இரு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.

இனி இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களுக்கான தேவை குறித்தும் அவற்றின் முக்கியத் துவம் குறித்தும் பலர் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலை யில் இரண்டு கட்சிகளுமே உள்கட்சி பரிசோதனைகளுக்கான தேவையையும் செயல்திட்டங் களை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருக்கின்றன.

இந்தியாவை ஆளக்காத்திருக்கும் வலதுசாரி அரசியலை எதிர் கொள்ள இரு கட்சிகளையையும் இணைப்பதன் சாத்தியப்பாடுகள் பற்றியும் குரல்கள் எழத்தொடங்கி யிருக்கின்றன.

“பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் இடதுசாரிகளுக்கு ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது. இது மிக சோதனையான கால கட்டம். முன்னெப்போதையும் விட இப்போது இடதுசாரி இயக்கங் களின் தேவை கூடுதலாக இருக்கிறது.

இந்த காலகட்டத்தில் இடதுசாரிகள் உள்பரிசோதனை செய்துகொண்டு இயக்கத்தை புதுப்பிக்க வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம். அதற்கான பணிகளை உடனடியாக தொடங்கு வோம்” என்கிறார் சிபிஐயின் தேசிய செயலாளர் டி ராஜா.

“பா.ஜ.கவின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம், மக்களுக்கு காங்கிரஸின் மீதிருந்த வெறுப்பே. இந்த வெறுப்பு மக்கள் விரோத பொருளாதார கொள்கை களாலேயே உருவானது.

ஆனால் பொருளாதார கொள்கைகளை பொறுத்த வரையில் பா.ஜ.க.விற்கும் காங்கிரஸுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை விரை விலேயே மக்கள் உணர்வார்கள். அப்போது இடதுசாரிகள் மக்கள் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய சூழல் மீண்டும் உருவாகும்” என்கிறார் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன்.

இந்தியா ஒரு அசாதாரணமான சூழலை எதிர்நோக்கியிருப்பதாக இரண்டு தலைவர்களுமே சொல்கிறார்கள்.

“மக்கள் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அம்பேத்கர் போன்றவர்கள் கனவு கண்ட குடியரசு இந்தியாவிற்கும் இப்போது பதவியேற்கவிருக்கும் அரசின் இந்துத்துவ இந்தியாவிற்குமான இடைவெளி மிகப்பெரியது. இந்த அசாதாரணமான சூழ்நிலைக்கு ஏற்ப இடதுசாரிகள் தம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது” என்கிறார் ராஜா.

தகவமைப்பின் ஒரு அங்கமாக இணைப்பு இருக்கும் என்பதை அவர் மறுக்கவில்லை. “கட்சி பிளவுபட்ட போது இருந்த அரசியல் சூழல் வேறு, இப்போதிருக்கும் அரசியல் சூழல் வேறு.

அதே நேரம் ஒன்றுபட்ட கட்சியிலிருந்த தலைவர்களுள் மிகச்சிலரே இப்போது எஞ்சியிருக்கிறார்கள். அதனால் கட்சி இணைப்புப் பற்றி இங்கு பலரிடம் உணர்வுப்பூர்வமான ஒரு தேவை இருப்பது போல தெரியவில்லை. ஆனால் வலதுசாரி அரசியல் ஒரு பெரிய வெற்றி பெற்றிருக்கும் சூழலில் இணைப்பை காலம் வலியுறுத் தும் என்றே தோன்றுகிறது” என்கிறார்.

1964-ல் கொள்கை அடிப்படை யிலான வேறுபாடுகளால் ஒன்று பட்ட சிபிஐ உடைந்து சிபிஐ எனவும் சிபிஎம் எனவும் பிளவு பட்ட பிறகு அவ்வப்போது இரு கட்சிகளுக்குமிடையிலான இணைப்பு குறித்து ஊகங் களின் அடிப்படையிலான செய்திகள் வந்து கொண்டே தானிருக்கின்றன. ஆனால் இணைப்புப் பற்றி இது வரை அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளுமே பேசியதில்லை.

ஆனால் இப்போது அதை அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியிருப்பதை போல தோன்றுகிறது. இணைப்பு பற்றி பேச விரும்பாத வரதராஜன், இரண்டு கட்சிகளும் இன்னும் நெருக்கமாக செயல்பட வேண்டிய தேவை இருப்பதாக சொல்கிறார். இணைப்பில் பல நடைமுறை பிரச்னைகள் இருப்பதாக இரு கட்சி தொண்டர்களும் கருதுவதையும் பார்க்க முடிகிறது.

ஆனால் பா.ஜ.க. பெற்றிருக்கும் அசுர வெற்றி அந்த நடைமுறை பிரச்சினைகளுக்கு முடிவு கட்டி இணைப்புக்கு வழி வகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x