Last Updated : 06 Jun, 2015 05:23 PM

 

Published : 06 Jun 2015 05:23 PM
Last Updated : 06 Jun 2015 05:23 PM

இந்தியா-வங்கதேசம் இடையே 2 பேருந்து சேவைகள் அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

இந்திய-வங்கதேசம் இடையே பிணைப்புறுதியை ஏற்படுத்தும் நோக்கமாக 2 பேருந்து சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சனிக்கிழமையன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கொல்கத்தா-டாக்கா-அகர்த்தலா, மற்றும் டாக்கா-ஷில்லாங்-குவஹாத்தி ஆகிய இரு பேருந்து சேவைகள் மேற்கு வங்கத்தை, வங்கதேச தலைநகர் டாக்கா வழியாக 3 வடகிழக்கு மாநிலங்களை இணைக்கிறது.

இந்த பேருந்து சேவைகளின் அறிமுக நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடி அகர்தலா-டாக்கா-கொல்கத்தா பேருந்து சேவைக்கான பயணச்சீட்டை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் அடையாளமாக அளிக்க, ஷேக் ஹசீனா, டாக்கா-ஷில்லாங்-குவஹாத்தி பேருந்துக்கான பயணச்சீட்டை மோடியிடம் அளித்தார்.

கொல்கத்தா-டாக்கா-அகர்தலா சேவைக்கான பயணச்சீட்டை மம்தா பானர்ஜி, ஷேக் ஹசீனாவுக்கு அளித்தார்.

கொல்கத்தா-அகர்தலா-டாக்கா மார்க்கத்தில் 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன, ஒன்று மேற்கு வங்க அரசாலும் மற்றொன்று திரிபுரா அரசாலும் நடத்தப்படும்.

டாக்கா-ஷில்லாங்-குவஹாத்தி பேருந்து சேவையை வங்கதேசம் நடத்தவுள்ளது.

இந்தப் பேருந்து சேவைகள் மூலம் வடகிழக்கு மாநிலங்களான, திரிபுரா, அசாம், மேகாலாயா மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்று தெரிகிறது.

கொல்கத்தா-டாக்கா-அகர்தலா பேருந்து சேவையினால் மேற்கு வங்கத்திற்கும் திரிபுராவுக்கும் இடையே உள்ள தூரம் 560கிமீ குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளுக்கு இடையேயான ரயில்வே இணைப்பும் வலுப்படுத்தப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x