

காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நவீன தாராளமய கொள்கை களை காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. அதனுடன் கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது.
மோடி அரசு மேற்கொண்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் நாடாளுமன்றத்துக்கு உள்ளே பிற அரசியல் கட்சிகளுடன் கைகோத்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். நாடாளு மன்றத்துக்கு வெளியே நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்தோம். குறிப்பிட்ட பிரச்சினைகளில் பிற கட்சிகளுடன் ஒத்துழைத்து செயல்படுவோம்.
காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல் புகார்கள், அதன் பொருளாதார கொள்கைகளால்தான் பாஜக ஆட்சிக்கு வரமுடிந்துள்ளது. இந் நிலையில் அதே கொள்கைகளை காங்கிரஸ் தொடர்ந்து பின் பற்றிவரும்போது எப்படி அதனு டன் கூட்டணி வைக்கமுடியும்.
மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிலம் கையகப்படுத் தும் மசோதாவை நாடாளுமன்றத் தில் நிறைவேற்றியே தீருவது என பிடிவாதம் காட்டிவருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டில் பாஜக ஆதரித்த மசோதாதான் இது. இப் போது அதில் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். 2013-ல் பாஜக ஆதரவுடன்தான் இந்த மசோதா நிறைவேறி சட்டமானது. ஆனால் இப்போது அதில் பாஜக திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறது. எப் போதும் காணாதவகையில் 3-வது முறையாக நிலம் கையகப்படுத் தும் அவசர சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
லலித் மோடி விவகாரத்தில் ஆழமான விசாரணை தேவை. நீதித்துறையின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிப் பது அவசியம். அப்போதுதான் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க முடியும்.
இவ்வாறு யெச்சூரி தெரிவித்தார்.