Last Updated : 16 Jun, 2015 06:47 PM

 

Published : 16 Jun 2015 06:47 PM
Last Updated : 16 Jun 2015 06:47 PM

ராமர் கோயில் கொள்கையில் மாற்றமில்லை: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் அரசியல் சாசன சட்டம் 370-வது பிரிவை நீக்குவது ஆகிய கொள்கைகளில் எந்த வித மாற்றமும் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் இந்த விவகாரங்களில் விரிவான ஆலோசனைக்குப் பிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது ஆகியவை பாஜகவின் கொள்கைகளாக தொடர்கின்றன. எங்களுடைய கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒருபோதும் நாங்கள் கைவிடமாட்டோம்.

குறிப்பாக 370-வது சட்டப் பிரிவை நீக்குவது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. மேலும், இதனால் பயனடையும் பகுதி மக்களிடமும் கருத்து கேட்கப்படும். அதன் பிறகுதான் இதுபற்றி முடிவு எடுக்க முடியும்.

அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்தை எட்டாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது. இதுதொடர்பான நடைமுறைகள் மெதுவாக நடைபெறும். எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது. வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. எனவே, இப்போதைக்கு நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பதும், வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x