

தடைசெய்யப்பட்ட போடோ அமைப்பை சேர்ந்த 4 இளைஞர் களை அசாம் போலீஸார் பெங்களூரு அருகே நேற்று அதிகாலை கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக போடோ அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிறகு, கர்நாடக மாநிலத்துக்கு தப்பி வருவதாக அசாம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கர்நாடகத்தில் மாநில போலீ ஸாருடன் இணைந்து அசாம் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 2 ஆண்டுகளில் போடோ அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவை அடுத்துள்ள பிடதியில் போடோ அமைப்பை சேர்ந்த 4 இளைஞர்கள் பதுங்கி இருப்பதாக அசாம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றிவளைத்து நால்வரையும் கைது செய்த னர்.
இது தொடர்பாக பெங்களூரு போலீஸார் கூறும்போது, “அசாமில் தேடப்படும் குற்ற வாளி களாக அறிவிக்கப்பட்ட தோமர் பசுமத்ரி, சந்தன் பசுமத்ரி, நசீம் பசுமத்ரி, ஜீபால் நர்செரி ஆகியோர் பிடதியில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்துள்ளனர். அசாமில் உள்ள இவர்களின் கூட்டாளிகள் மூலம் இந்த விவரம் தெரியவந்தது. நால்வரும் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர். இரவில் மட்டும் வீட்டுக்கு வருவதால், இவர்களைப் பற்றி அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. கைதாகியுள்ள நால்வரும் சுமார் 20 வயது இளைஞர்கள். எனவே இவர்கள் கல்லூரி மாணவர்கள் என பெரும்பாலானோர் கருதியுள்ளனர்.
மைசூரு, ஹூப்ளி, சம்ராஜ்நகர், மங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் போடோ அமைப்பினர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அசாம் போலீஸாருடன் இணைந்து இவர்களை தேடும் பணி தொடங்கியுள்ளது” என்றார்.
போடோ அமைப்பினர் கர்நாடகத்தில் தொடர்ந்து கைதாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.