Published : 26 Mar 2014 08:23 AM
Last Updated : 26 Mar 2014 08:23 AM

குஜராத் கலவரத்துக்காக வருத்தப்படுகிறேன்: மனம்திறந்தார் நரேந்திர மோடி

கடந்த 2002 குஜராத் கலவரத்துக்காக வருத்தப்படுகிறேன், ஆனால் குற்றஉணர்வு இல்லை. நான் குற்றவாளி என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை என தனது வாழ்க்கை வரலாறு நூலில் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் எழுத்தாளரும் டி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஆண்டி மெரினோ, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து நூல் வெளியிட்டுள்ளார்.

ராஜினாமா செய்ய முன்வந்தேன்

அந்தப் புத்தகத்தில் நரேந்திர மோடி தனது மனம் திறந்து கூறி யிருப்பதாவது: 2002 குஜராத் கலவரத்துக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் குற்றஉணர்வால் பாதிக்கப்பட வில்லை. நான் குற்றவாளி என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை.

கலவரத்துக்கு ஒரு மாதத்துக் குப் பின்பு 2002 ஏப்ரல் 12-ம் தேதி பனாஜியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகத் தெரிவித்தேன்.

ஆனால் கட்சித் தலைமை எனது ராஜினாமாவை விரும்ப வில்லை. அதேபோல் என்னை விட்டு விலக மாநில மக்களும் விரும்பவில்லை.

அண்டை மாநிலங்கள் உதவவில்லை

2002 பிப்ரவரி 27-ம் தேதி 59 கரசேவகர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த நாளில் கோத்ராவில் இருந்து காந்திநகருக்கு இரவில் திரும்பினேன். ராணுவத்தை தயார் நிலையில் இருக்கச் செய்யுமாறு எனது அதிகாரிகளுக்கு உத்தர விட்டேன்.

ஆனால் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் என்பதால் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி யது. அதனால் ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருந் தனர். எனவே அண்டை மாநில முதல்வர்களின் உதவியை நாடினேன். ராஜஸ்தான், மகா ராஷ்டிர மாநிலங்களில் இருந்து 10 கம்பெனி போலீஸ் படையை அனுப்ப கேட்டுக் கொண்டேன்.

மகாராஷ்டிர அரசு மட்டும் பெயரளவுக்கு சிறிய போலீஸ் படையை அனுப்பியது. மற்ற 2 மாநில அரசுகளும் எனது கோரிக்கையை நிராகரித்து விட்டன.

வளர்ச்சியே தாரக மந்திரம்

என்னைப் பொறுத்தவரை வளர்ச்சிதான் தாரக மந்திரம். மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதே எனது அரசின் பிரதான நோக்கம். என்றார் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x