Last Updated : 06 Jun, 2015 02:35 PM

 

Published : 06 Jun 2015 02:35 PM
Last Updated : 06 Jun 2015 02:35 PM

நூடுல்ஸ் வகைகளுக்கு மகாராஷ்டிரா, கர்நாடகம், அருணாச்சல பிரதேசத்திலும் தடை

மேகி நூடுல்ஸ் வகைகளுக்கு கர்நாடகம், அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிர மாநிலத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசின் சார்பில் சுற்றறிக்கையும் விடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் மாகி நூடுல்ஸ் வகைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு அனைத்து வகை நூடுல்ஸ்களையும் சோதித்து வருவதாகவும் அதுவரை அந்தப் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் காதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த வகையில், நூடுல்ஸ் வகைகளான நெஸ்லே நூடுல்ஸ், யிப்பீ, ஸ்மித், ஜோங்ஸ், சிங்ஸ், டாம் ரேமன் மற்றும் ஹார்லிக்ஸ் நூடுல்ஸ்களை சோதனை முடிவுகள் வெளிவரும் வரை தடை செய்யப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர அரசும் இதற்காக ஆணையை வெளியிட்டுள்ளது.

இதுவரை குஜராத், டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கேரளா, தமிழகம் என தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரிலும் நூடுல்ஸுக்கு தடை கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x