Last Updated : 22 May, 2015 07:09 AM

 

Published : 22 May 2015 07:09 AM
Last Updated : 22 May 2015 07:09 AM

மழை, புழுதிப் புயலில் பயிர்கள் நாசம்: கடனை அடைக்க குழந்தைகளை விற்கும் விவசாயிகள் - மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரிதாபம்

பருவம் தவறி பெய்த பெருமழை, புழுதிப் புயலில் சிக்கி பயிர்கள் எல்லாம் நாசமாகி விட்டன. கடன் மேல் கடன் வாங்கி பயிர்களை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணானது.

கடன் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால், லால் சிங்குக்கு வேறு வழி தெரிய வில்லை. தனது 2 மகன்களை கால்நடை வளர்ப்பவர்களுக்கு விற்று விட்டார். விலை வெறும் ரூ.35 ஆயிரம். இதுபோல் விவசாயி கள் பலர் மனதை கல்லாக்கி கொண்டு தங்கள் குழந்தைகளை விற்றுள்ளனர். இதுதான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகள் நிலை.

ம.பி. மோகன்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் லால் சிங். இவருக்கு மனைவி, 2 மகன்கள். ‘‘புழுதிப் புயல், திடீரென பெய்த கனமழை யில் பயிர்கள் நாசமாகிவிட்டன. வீட்டில் சாப்பாட்டுக்கு வழி யில்லை. பயிர் செய்ய வாங்கிய கடன் அதிகமாகி விட்டது. வேறு வழியே இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கால்நடை வளர்ப் பவர்களுக்கு என் 2 மகன்களையும் ஓராண்டு ஒப்பந்தத்துக்கு விற்று விட்டேன்’’ என்கிறார் லால் சிங்.

மேலும், ‘‘வாங்கிய கடனை திரும்ப அடைக்க வழியில்லை. தொடர்ந்து பயிர் செய்ய வேண்டு மானால், இன்னும் பணம் வேண்டும். குழந்தைகளை விற்பது சட்டவிரோதம் என்பது எனக்கு தெரியும். என் மகன்களை அவர் கள் சித்ரவதை செய்வார்கள், கடுமையாக வேலை வாங்குவார் கள் என்பதும் தெரியும். ஆனால், இதை தவிர எனக்கு வேறு வழியில்லை’’ என்கிறார் லால் சிங்.

‘‘பெற்ற பிள்ளைகளை விற்பது தவறுதான். உயிர்வாழ அவர்களை விற்பதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களை விற்காமல் இருந்திருந்தால், மற்ற விவசாயிகளை போல நாங்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்’’ என்கிறார் லால் சிங்கின் மனைவி மணிபாய்.

இதுகுறித்து ம.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘பருவநிலை மாற்றத் தால் பயிர்கள் பொய்த்து போனது. கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அல்லது தங்கள் குழந்தைகளை விற்றுவிடுகின்ற னர்’’ என்கின்றனர்.

ஹர்டா மாவட்ட ஆட்சியர் ரஜ்னீஷ் வஸ்தவா கூறுகையில், ‘‘கர்கோன் மற்றும் ஹர்டா மாவட் டத்தைச் சேர்ந்த 5 சிறுவர்களை, கால்நடை வளர்ப்போரிடம் இருந்து கடந்த மாதம் மீட்டுள் ளோம். அவர்களில் லால் சிங்கின் 2 மகன்களும் அடங்குவர். கால் நடை வளர்ப்பவர்களிடம் இருந்து லால் சிங்கின் 2 மகன்களும் தப்பி யோடி விட்டனர். அவர்களை மீட்டு உள்ளூர் காப்பகத்தில் வைத்திருந் தோம். இப்போது இருவரையும் லால் சிங்கிடம் ஒப்படைத்துள் ளோம்’’ என்றார்.

லால் சிங்கின் மூத்த மகன் சுமித் (12), இளையவன் அமித் (11). கால்நடை வளர்ப்பவர்களின் கொடுமை தாங்காமல், இருவரும் தப்பி உள்ளனர். ஆனால், வீட்டுக் குச் செல்ல பயந்துள்ளனர். தந்தை என்ன செய்வாரோ என்ற அச்சத்தில் தலைமறைவாக இருந் துள்ளனர்.

‘‘நாங்கள் ஆடு மாடு களை மேய்க்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எங் களை அவர்கள் அடித்து உதைப் பார்கள். சாப்பாடு சரியாக தருவ தில்லை’’ என்று சுமித் கூறினான்.

இதற்கிடையில், கால்நடை வளர்ப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்று ஆட்சியர் வஸ்தவா தெரிவித்தார். இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஹர்டா மாவட்ட பிரிவு இயக்குநர் விஷ்ணு ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘மீட்கப்பட்ட சிறுவர் களின் வீடுகளுக்கு அவ்வப்போது எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சென்று அவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.

நாட்டிலேயே இந்த ஆண்டு வறட்சி, திடீர் மழை, புழுதிப் புயலால் மத்தியப் பிரதேச மாநிலம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தாக மாநில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 5 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை உட்பட பயிர்கள் நாசமாகி உள்ளன. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை சுமார் 40 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்று போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘‘ புழுதிப் புயலால் ம.பி.யில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பயிர்கள் பாதிப்பு குறித்து ஆராய்ந்து விவசாயி களுக்கு விரைவில் தகுந்த நிவாரணம் வழங்க ஆட்சியர் களுக்கு உத்தரவிட்டுள்ளோம்’’ என்று மாநில வேளாண் துறை அமைச்சர் கவுரிசங்கர் பிஷண் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x